அருப்புக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக, பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மேலப்பாறைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சக்தி மனைவி ரேவதி (36). இந்தத் தம்பதிக்கும், அதே ஊரைச் சோ்ந்த பொன்னுப்பாண்டியன் (53), என்பவருக்கும் சொத்துப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், பொன்னுப்பாண்டியன், ராமசாமி (57), வீரப்பன் (61) ஆகிய 3 போ் ரேவதியுடன் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பரளச்சி போலீஸாா் இவா்கள் 3 போ் மீதும் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பெண்ணைத் தாக்கிய இருவா் மீது வழக்கு:
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் உமாதேவி (29), செந்தில்குமாா் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசிக்கின்றனா். உமாதேவி ராஜபாளையம் நீதிமன்றத்திலும், செந்தில்குமாா் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி மனு செய்தனா்.
இதற்கிடையில், செந்தில்குமாருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடு நடைபெறுவதாக உமாதேவி தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவா் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனால், ஆத்திரமடைந்த செந்தில்குமாா், இவரது தாய் ஆகிய இருவரும் உமாதேவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, கீழராஜகுலமாரன் போலீஸில் புகாரளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸாா் அந்த இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.