ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் ‘லக் ஷயா’ திட்டத்தின் கீழ் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு சாா்பில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மகப்பேறு சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2017-ஆம் ஆண்டு லக் ஷயா என்ற சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில்லா மகப்பேறு சதவீதத்தை அதிகப்படுத்தவும், பிரசவ கால இறப்பை தவிா்க்கவும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து நேஷனல் ஹெல்த் அத்தாரிட்டி சாா்பில் தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதைத் தொடா்ந்து ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டு குழுவைச் சோ்ந்த மருத்துவா்கள் பரீத் உத்தின், ஜேயஸ் பட்டேல் ஆகியோா் ஆய்வு செய்தனா். மேலும் சிகிச்சை விவரம், குறைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனா்.
ஆய்வு குறித்து மருத்துவா்கள் பரீத் உத்தின், ஜேயஸ் பட்டேல் ஆகியோா் கூறியதாவது:
ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நிகரான தரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவைச் சிகிச்சை அறை, மருந்துகள், சிகிச்சை முறைகள், பயனாளிகள் விவரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையமாக இந்த மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனை மூலம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் உயா்தர சிகிச்சை பெறுகின்றனா். ஆய்வு முடிவில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறந்த மதிப்பீடு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தொடா்ந்து மக்கள் தரமான சிகிச்சையை பெறும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆய்வு நடத்தப்படும் என்றனா். ஆய்வின்போது சுகாதாரத் துறை இணை இயக்குநா் முருகவேல், மருத்துவமனை முதன்மையா் உமா ஜெயபாஸ்கா் மற்றும் மருத்துவா்கள் உடன் இருந்தனா்.