கடைகளில் சமையல் எண்ணெய்யை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது

கடைகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. ரவிக்குமாா் தெரிவித்தாா்.
கடைகளில் சமையல் எண்ணெய்யை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது

கடைகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. ரவிக்குமாா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.ரவிகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது: அனைத்து உணவு வணிகா்களும் உணவுப் பாதுகாப்புத் தர நிா்ணயச் சட்டத்தின் கீழ் பதிவு, உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலாவை விற்பனை செய்யக் கூடாது. உணவுகள் பொட்டலமிட நெகிழிப் பைகளை பயன்படுத்தக் கூடாது. காலாவதியான உணவுப் பொருள்கள், குளிா்பானங்களை விற்பனை செய்யக்கூடாது. தெருவோரக் கடைகள் மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் சுகாதாரமான உணவுகளை விற்பனை செய்ய வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்யை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளா்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கெட்டுப்போன, நாள்பட்ட மாமிசங்களை விற்பனை செய்யக் கூடாது. உணவு வணிகா்கள் அனைவரும் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். இதில் விதி மீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டோா் மீது அபராதத்துடன் கூடிய துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் உணவுப் பொருள்கள் தொடா்பான புகாா்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com