ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்ரா பௌர்ணமியையொட்டி ரெங்கமன்னார் கள்ளழகர் வேடத்தில் ஆண்டாளுடன் இணைந்து ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பரவசம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று ஆண்டாள் கோயிலில் உள்ள ஆண்டாளும், ரெங்கமன்னாரும் வீதி உலா வந்து ஆற்றில் இறங்குவது வழக்கம். இந்த ஆண்டு இதனை முன்னிட்டு ஆண்டாள் கூரப் பட்டு புடவை அணிந்து தங்க சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் கள்ளழகர் வேடத்தில் பச்சைப் பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி ஆற்றில் இறங்கினர்.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோபாலா..! கோவிந்தா..! என்று முழக்கமிட்டனர். அங்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆற்றில் தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளிய ஆண்டாளை, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் கோலத்தில் எழுந்தருளி உள்ள ரெங்கமன்னார் மூன்று முறை வலம் வந்து வையாளி சேவை நடந்தது.
பூஜைகளை தலைமை அர்ச்சகர் ரகுப்பட்டர் நடத்தி வைத்தார். ஸ்தானிகம் ரங்கராஜ், வேதபிரான் பட்டர் சுதர்சன், மணியம் கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் ஆய்வாளர் கீதா தலைமையில் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.