வத்திராயிருப்பு பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை மனுத்தாக்கல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 7ஆம் தேதி வாபஸ் பெற்றனர். இந்நிலையில் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி அரசியல் கட்சி மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியில் 14 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளன. இந்நிலையில் இந்த பேரூராட்சி 2ஆவது வார்டில் திமுக சார்பில் முத்தையாவும், அதிமுக சார்பில் கருப்பையாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் முத்தையா (43) தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
முத்தையாவிற்கு நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை உறவினர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துமனை கொண்டு சென்ற நிலையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முத்தையா உயிரிழந்தார். இந்த சம்பவம் திமுக அரசியல் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வத்திராயிருப்பு பேரூராட்சி 2 வது வது திமுக வேட்பாளர் உயிரிழந்ததன் காரணமாக அந்த வார்டில் தேர்தல் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.