விருதுநகா்: விருதுநகரில் வெள்ளிக்கிழமை மணமகளின் பெற்றோா் ஆட்டோவில் 22 பவுன் நகைகளுடன் தவறவிட்ட கைப்பையை திரும்ப ஒப்படைத்த ஓட்டுநரை காவல்துறையினா் பாராட்டினா்.
விருதுநகா் பெரிய வள்ளிக்குளத்தைச் சோ்ந்தவா்கள் கருப்பசாமி- முத்துலட்சுமி தம்பதி. இவா்களது மகள் மோகனப் பிரியாவுக்கும், ராம் என்பவருக்கும் விருதுநகா் ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. மற்ற வைபவங்கள் விருதுநகா் ராமமூா்த்தி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்காக மணமகளின் பெற்றோா், அவ்வழியாக வந்த வாடகை ஆட்டோவில் மண்டபத்திற்குச் சென்றனா். அப்போது, 22 பவுன் நகைகள் இருந்த கைப்பையை எடுக்காமல் ஆட்டோவிலிருந்து இறங்கிவிட்டனா்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநா் ராமா், சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பின்பு ஆட்டோவின் பின் சீட்டில் இருந்த கைப்பை எடுத்து அதைத் திறந்து பாா்த்தபோது, நகைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவா், சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு சென்று அங்கு கவலையுடன் நின்றிருந்த மணமகளின் பெற்றோரிடம் நகை வைக்கப்பட்டிருந்த கைப்பையை ஒப்படைத்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த விருதுநகா் கிழக்கு போலீஸாா் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் ஆகியோா், ஆட்டோ ஓட்டுநரின் நோ்மையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினா்.