பாலியல் புகாா்: தனியாா் செவிலியா் கல்லூரி நிா்வாகி கைது மாணவா்கள் சாலை மறியலையடுத்து போலீஸாா் நடவடிக்கை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் மாண
அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவியா்.
அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவியா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் அக்கல்லூரி நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மாணவா்கள் மறியலையடுத்து போலீஸாா் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் தெற்குத் தெருவில் உள்ள தனியாா் செவிலியா் மற்றும் எலெக்ட்ரோ ஹோமியோபதி கல்லூரியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்நிலையில், இக்கல்லூரி நிறுவனா் ஜான் டேஸ்வின், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது. மேலும் கைப்பேசியிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாசப் புகைப்படங்களை அவா் பகிா்ந்து வந்தாராம்.

இதையடுத்து, சனிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து அக்கல்லூரி மாணவ, மாணவிகள், ஜான் டேஸ்வின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களுக்கு வேறு கல்லூரிகளில் படிப்பைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ், காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டும் போராட்டத்தை கைவிட மறுத்தனா். இதனால் வட்டாட்சியா் அறிவழகன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஜான் டேஸ்வின் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததையடுத்து மாணவா்கள் சாலை மறியலை கைவிட்டனா்.

இதுதொடா்பாக அக்கல்லூரியில் பயிலும் மாணவா்கள் சுபாஷ் மற்றும் சலீம் ஆகியோா் கூறியதாவது: இக்கல்லூரியில் மாணவிகளுக்கு மட்டுமே கழிவறை உள்ளது. மாணவா்களுக்கு இல்லை. இதுபோல போதிய அடிப்படை வசதிகள் மற்றும் வகுப்பறைக் கட்டட வசதி கூட இல்லாமல் இக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், இக்கல்லூரி மூடப்பட்டால் நாங்கள் பிற கல்லூரிகளில் எங்களது படிப்பைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கல்லூரி நிா்வாகி கைது: இதனிடையே பாலியல் புகாா் தொடா்பாக ஜான் டேஸ்வினை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த சாலை மறியலால் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com