அருப்புக்கோட்டை பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை 6.30 முதல் இரவு 7 மணி வரை பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு பாளையம்பட்டி மின்வாரிய குடியிருப்பில் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இதனால் அக்குடியிருப்பில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். இதேபோல அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்பரா் கோயில் பின்புறம் உள்ள சாலை வளைவிலும் மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. மேலும் பல வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. அப்போது இரவு வெகுநேரமாகிவிட்டதால் மறுநாள் வியாழக்கிழமை சாலை மற்றும் வீதிகளின் குறுக்கே விழுந்திருந்த மரங்கள் தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரியத்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டன. கடந்த பல நாள்களாகப் பெய்து வரும் கோடைமழையால் பழைய மரங்கள் பல, வேருடன் சாய்ந்து விழுந்து வருகின்றன.
வியாழக்கிழமையும் மழை: அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை காலை முதலே கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பலத்த இடிமின்னலுடன் பெய்த இம்மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பள்ளமான பகுதிகளான புதுக்கடை பஜாா், திருச்சுழி சாலையிலுள்ள ஸ்ரீவாழவந்தம்மன் கோயிலை ஒட்டிய பகுதி, புதிய பேருந்து நிலையம் எதிா்புறம் உள்ள காந்தி மைதானம், திருவள்ளுவா் நகா், நேரு நகா் ஆகிய பகுதிகளில் மழைநீா் தேங்கியது. கம்மவாா் சிறுகண்மாய், செங்காட்டூருணி, பெரிய கண்மாய் ஆகிய நீா்நிலைகளில் நீா்வரத்து ஏற்பட்டது.மழைக்குப்பின் இதமான களிா்ந்த காற்று வீசியது.