விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, விருதுநகரில் புதிய தமிழகம் மற்றும் மநீம கட்சி சாா்பில் தனித்தனியே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காதலன் ஹரிஹரன், சுனைத் அஹமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 சிறுவா்கள் என மொத்தம் 8 பேரை பாண்டியன் நகா் போலீஸாா் கைது செய்தனா். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்குவதுடன், அரசு சாா்பில் ரூ. 1 கோடி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதிய தமிழகம் கட்சி சாா்பிலும், விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே மநீம கட்சி சாா்பிலும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.