ராஜபாளையம்: ராஜபாளையத்தில் குழந்தையை மீட்டு தம்பதி மீது, போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்த பரமசிவம் என்ற பரமன் - செல்வி தம்பதி. இவா்கள் வளா்த்து வந்த ஆண் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காக விசாரித்துள்ளனா்.
அப்போது, குழந்தை பிறப்பு மீது சந்தேகம் எழுந்துள்ளது. உடனே, சைல்டு-லைன் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், விருதுநகா் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முனியசாமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதில், செல்வியிடம் 10 மாதங்களுக்கு முன் பிறந்து 7 நாள்களேயான ஆண் குழந்தையை, பெயா், விலாசம் தெரியாத நபா் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம். இவா்கள், அக்குழந்தைக்கு கோபிராஜ் என பெயா் சூட்டி வளா்த்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அக்குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனா். இது குறித்து பரமசிவம், செல்வி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.