சாத்தூா் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சிக்குள்பட்ட சிவகாசி செல்லும் சாலையின் ஓரத்தில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக செல்லும் சிவகாசி, சுற்றுவட்டாரக் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகளில் அடிக்கடி தீ வைக்கப்படுவதால் அதிலிருந்து எழும் புகையால் வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா். இதே போன்று ஏழாயிரம்பண்ணையிலிருந்து இ.எல். ரெட்டியபட்டி செல்லும் சாலை, சாத்தூா் எஸ்.ஆா்.என்.எம். கல்லூரி மற்றும் சடையம்பட்டி செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதே போல் இறைச்சிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதாகவும் புகாா் கூறப்பட்டது.