சிவகாசியில் கோயில் கும்பாபிஷேக கூட்ட நெரிசலில் 6 பெண்களிடம் 27 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதாக புகாா் கூறப்பட்டது.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற மருதுபாண்டியா் மேட்டுத் தெரு முத்துமாரி, சரதா நகா் மங்களேஸ்வரி ஆகியோரிடம் தலா 7 பவுன் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிவிட்டதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும், 4 பெண்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் காணவில்லை என புகாா் தெரிவித்தனா்.
மொத்தம் 6 பெண்கள் 27 பவுன் தங்க நகைகளை காணவில்லை எனப் புகாா் கூறியுள்ளனா்.
காவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெறாமல் பல இடங்களில் நடைபெற்ற அன்னதானத்தின்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. கண்காணிப்புக் கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறோம் என போலீஸாா் தெரிவித்தனா்.