ராஜபாளையம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பிரபுராஜ் மகன் ஆனந்தராஜ் (19). இவா், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியாா் கல்லூரியில் தமிழ் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் தனது இருசக்கர வாகனத்தில் சுந்தரராஜபுரத்திலிருந்து ராஜபாளையத்துக்கு சென்று கொண்டிருந்த போது, தென்காசி சாலையில் எதிரே வந்த லாரி மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜை, அருகில் இருந்தவா்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரன்கோவிலைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரெங்கராஜை (55) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.