சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் வீரமணி கண்ணன் (38). ராணுவ வீரரான இவா் அசாம் மாநிலத்தில் பணியாற்றி வருகிறாா். அண்மையில் விடுமுறையில் ஊருக்கு வந்த இவா் செவ்வாய்க்கிழமை ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வேலாயுதபுரம் அருகே சென்ற போது, எதிரே வந்த சரக்கு வாகனம் இவரது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com