விருதுநகர் அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காரியாபட்டி பகுதி ஆவியூரில் தனியார் கல்குவாரி இயங்கி வருகின்றது. இந்த கல்குவாரியில் பாறைகளை உடைக்க பயன்படுத்துவதற்காக வெடிப் பொருள்கள் கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறையில் இன்று காலை இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக வெடி மருந்துகள் வெடித்து சிதறியுள்ளது. அந்த சமயத்தில் கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் கல்குவாரியில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த பகுதிகளில் வெடிமருந்துகள் இருப்பதால் காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் உள்ளனர்.
இந்த விபத்தால் பல கிலோ மீட்டர் தூரம் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தனியார் கல்குவாரியை உடனடியாக மூடக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.