தமிழகத்தில் 2017 மே மாத இறுதிக்குள் அனைவருக்கும் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் 392 பயனாளிகளுக்கு ரூ.3.26 கோடியில் இலவச மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியது:
தமிழ்நாட்டில் 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதில் 30 சதவீதம் அளவுக்கு தமிழகத்தில் உற்பத்தியாகிறது. மத்திய தொகுப்பில் விலைகொடுத்து வாங்கி விலையில்லாமல் குடும்ப
அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. 2005-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா புதிய குடும்ப அட்டை வழங்கினார். தற்போது புதிய குடும்ப மின்னணு அட்டை வழங்கப்படுகிறது. மே மாத இறுதிக்குள் மாநிலத்தில் அனைவருக்கும் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுவிடும்.
வலங்கைமான் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பேருக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் ரூ.3.15 கோடியில் வீடு கட்டும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார் காமராஜ். மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.