அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், மன்னார்குடி கிளையின் சார்பில் வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு செய்து தொடர் தர்னா போராட்டத்தை தொடங்கியது.
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும். ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி இலாகா ஊழியராக்க வேண்டும். மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், சென்னை நிர்வாக தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மன்னார்குடி தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற தர்னாவுக்கு சங்க கிளைச் செயலர் எம்.உதயக்குமார் தலைமை வகித்தார். கோரிக்கையை விளக்கி ஏஐடியுசி நகர சிறப்புத் தலைவர் ஆர்.ஜி.ரெத்னக்குமார், சங்க தலைவர் ஆர்.தமிழச்செல்வன், பொருளாளர் ஏ.பண்டரிநாதன், நிர்வாகி உக்கடை சி.செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் என்.சாந்தி ஆகியோர் பேசினர்.
இதில் மன்னார்குடி உப அஞ்சல் கோட்டத்திற்கு உள்பட்ட 105 கிராம அஞ்சலகங்களை சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு செய்து தர்னாவில் கலந்துகொண்டனர்.