திருத்துறைப்பூண்டி அருகே மதுக்கடையை மூடக்கோரி புதன்கிழமை பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குறும்பல் ஊராட்சிக்கு உட்பட்ட மணலி பிரதான சாலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னால் மதுபானக் கடை தொடங்கப்பட்டது. இதையடுத்து மணலி ஆலத்தம்பாடி சாலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டி மதுக்கடையை உடனடியாக மூடக்கோரி சாத்தங்குடி கிராம கமிட்டி தலைவர் சேகர் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச்செயலாளர் பாலு, தே.மு.தி.க ஒன்றியச்செயலாளர் வழக்கறிஞர் சுரேந்தர் முன்னிலையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மதுபானக்கடை மாவட்ட துணை மேலாளர் ராஜகோபால், திருத்துறைப்பூண்டி காவல்துணை கண்காணிப்பாளர் எம். ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஆலிவலம் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மதுபானக்கடையை உடனடியாக மூடுவதாக உறுதியளித்ததன்பேரில் முற்றுகைப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.