திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு இணை யதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் மே 26-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு ஆக.6-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் மே 23-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பயிற்சியின்போது இலவசமாக பாடக்குறிப்புகள் கடந்த ஆண்டு மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்படும். இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் ஆகியவற்றுடன், மன்னார்குடி சாலை கூட்டுறவு நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மே 23-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்று பயன்பெறலாம்.