பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி கொரடாச்சேரியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 60 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகம் தமிழகத்துக்கு காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காததாலும், பருவ மழைப் பொய்த்ததாலும் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சம்பா, குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொரடாச்சேரி பகுதி விவசாயிகள் கொரடாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2012-2013-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடுத் தொகை செலுத்தியிருந்த நிலையில், அந்த ஆண்டு ஏற்பட்ட சாகுபடி பாதிப்புக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், கொரடாச்சேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியை கண்டித்தும் அப்பகுதி விவசாயிகள் 60 பேர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.