காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி காய்ச்சல் குறித்து விவரம் அறிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், அங்காடிகள், கோயில் வளாகங்கள், மசூதிகள், வங்கி வளாகங்கள் ஆகிய இடங்களில் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பெரியவர்களும், சிறியவர்களும் மருத்துவ அலுவலரின் ஆலோசனைப்படி குறிப்பிடப்படும் அளவு நிலவேம்பு குடிநீர் குடிக்க கேட்டுக்கொள்ளப்கிறது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்தத்தில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும். ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை கண்டறியக் கூடிய செல் கவுண்டர்கள் அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளது.
இக்கருவியின் மூலம் 40 வினாடிகளில் ரத்த பரிசோதனை செய்து நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆய்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். மேலும், இம் மருத்துவமனைகள் 24 மணிநேரமும் இயங்கும் காய்ச்சல் சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.