மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை அமைச்சர் ஆர். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மன்னார்குடியை அடுத்த துண்டக்கட்டளை பகுதியைச் சேர்ந்த புகழேந்தி மனைவி உமாராணி (30), கருப்பையா மனைவி வாசுகி (50). இவர்கள் இருவரும் சனிக்கிழமை வயலில் நடவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்னல் தாக்கியது. இதில், உமாராணி உயிரிழந்தார். படுகாயமடைந்த வாசுகி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், உமாராணியின் கணவர் புகழேந்தி மற்றும் குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதி, பேரிடர் இழப்பு நிவாரண நிதி ஆகியவற்றிலிருந்து தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ. 4 லட்சம் உதவித் தொகையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அமைச்சருடன், மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் எஸ். செல்வசுரபி, வட்டாட்சியர் ஸ்ரீதேவி சிவானந்தம், அதிமுக நகரச் செயலர் ஏ.டி. மாதவன், ஒன்றியச் செயலர் கா. தமிழச்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.