திருவாரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 21) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள்அளிக்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.
மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குள்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.
இக்கூட்டத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம், ஆதார் அட்டை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையினரிடமிருந்து ஏற்கெனவே பெற்றுள்ள அடையாள அட்டை மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வர வேண்டும். இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின் அதையும் தவறாமல் கொண்டு வர வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள் பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.