கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி வி.ஏ.குப்புசாமி வியாழக்கிழமை காலமானார்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மரக்கடை அவ்வை நகரைச் சேர்ந்தவர் வி.ஏ.குப்புசாமி (80). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான இவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த போது, மன்னார்குடியும் இணைந்திருந்த இப்பகுதியின் கிளைப் பொருளாளராகவும், மரக்கடை மற்றும் கோரையாறு பகுதியில் அனைத்துக் கட்சி, அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து நடத்திய கரவொலி என்ற அமைப்பின் தலைவராகவும் திறம்பட செயலாற்றியவர்.
வயது முதிர்வால் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த வி.ஏ.குப்புசாமி வியாழக்கிழமை காலமானார். இவருக்கு ஞானாம்பாள் என்ற மனைவியும், 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகன்களில் வி.ஏ.கே.ராமதாஸ் என்பவர் விவசாய சங்க நகரப் பொருளாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
மறைந்த குப்புசாமியின் உடல் கோரையாற்று அருகேயுள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.
தொடர்புக்கு: 9578018630.