திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே பட்டப்பகலில் இருவேறு இடங்களில் நடைபெற்ற திருட்டு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முத்துப்பேட்டையை அடுத்த கீழநம்மங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (45). இவர் முத்துப்பேட்டையில் உள்ள கூட்டுறவு அங்காடியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை உறவினர் வீட்டுக்குச் சென்ற அவர், மாலையில் வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த எல்.இ.டி. டிவி திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல், எடையூர் காவல் சரகத்துக்குள்பட்ட பாண்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, அவரது வீட்டிலும் மர்மநபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் சங்கிலி, பணம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. எடையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.