அண்ணாவின் கனவுகளை அதிமுக மட்டுமே நிறைவேற்றி வருகிறது என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்.
திருவாரூரில் சனிக்கிழமை அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: அண்ணாவின் கொள்கைகளை அதிமுக மட்டுமே கடைபிடித்து வருகிறது.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று முழக்கமிட்டார் அண்ணா. அவரின் கனவை நனவாக்கும் வகையில் ஏழைகளுக்கென பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது அதிமுக அரசு. சாமானியர்களும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணினார் அண்ணா. அவரின் விருப்பப்படி சாதாரண மனிதர்களே, முதல்வர்களாக, மக்களுக்கேற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதிமுகவுக்கு மட்டுமே அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் தகுதி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வர் பதவிக்கு வந்து விடலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் ஆசைப்பட்டார். இதற்காக பல தவறான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவருடைய முயற்சிக்கு டிடிவி. தினகரன் துணையாக இருந்தார். திமுக நினைப்பதை நடத்தி காட்டுவதற்கு தினகரன் தொடர்ந்து துணை போகிறார். தமிழகத்தில் இன்னும் மூன்றாண்டுகளை, அதிமுக முழுமையாக ஆட்சி செய்யும். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். திருவாரூர் தொகுதியை சிறந்த வளர்ச்சிக்கு கொண்டு செல்ல அதிமுகவால் மட்டுமே முடியும் என்றார்.
அதிமுக நகரச் செயலர் ஆர்.டி. மூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றியச் செயலர் மணிகண்டன், தலைமை கழக பேச்சாளர் குண்டு கல்யாணம், அம்மா பேரவை நகரச் செயலர் எஸ். கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.