மன்னார்குடி அருகேயுள்ள எடமேலையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, ஊராட்சி பள்ளி 3-ஆம் வகுப்பு மாணவியரிடம் வகுப்பில் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்துவது குறித்தும், மதியம் வழங்கப்படும் சத்துணவு குறித்தும் கேட்டறிந்து, நாள்தோறும் வகுப்பில் நடத்தும் பாடங்களை மனதி நிற்பது போன்று எழுதி பழகுவதுடன், பொருள் புரியும் வகையில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர், எடமேலையூர் மேற்கு அங்கன்வாடி மையத்துக்கு சென்று நாள்தோறும் வருகைப் பதிவேடு,
குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த பதிவேடு, குழந்தைகளின் வளர்ச்சி குறித்த பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அங்கு பணியில் இருந்தவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது, மன்னார்குடி கோட்டாட்சியர் எஸ். புண்ணியக்கோட்டி, நீடாமங்கலம் வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.