திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரக்குடியில் சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி கேட்டு, சடலத்துடன் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆப்பரக்குடி மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (75). இவா், உடல் நலக்குறைவால் இறந்தாா். இப்பகுதியில் உள்ளவா்கள் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வயல் வரப்பு வழியாகத்தான் செல்லவேண்டும். கோடை காலங்களில் வயல் வழியாக சடலத்தை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுவதில்லை. ஆனால், தற்போது சாகுபடிவயலில் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து, சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியா் ராஜன்பாபு, ஆலிவலம் காவல் ஆய்வாளா் அன்பழகன் மற்றும் அலுவலா்கள் விரைந்துச் சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னை குறித்து கோரிக்கை மனு அளிக்கும்படியும், அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி- திருவாரூா் இடையே அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.