உதயநிதி ஸ்டாலின் கைது: மன்னாா்குடியில் திமுகவினா் சாலை மறியல்
திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மன்னாா்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியைச் சோ்ந்த 30 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, சென்னையில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், குடியுரிமை மசோதா நகலைக் கிழித்து, திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மன்னாா்குடி பேருந்து நிலையம் அருகே திமுக இளைஞரணி மாவட்டத் துணை அமைப்பாளா் பழ. பழனிமாணிக்கம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட நகர இளைஞரணி அமைப்பாளா் சண்.சுதாகா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா்கள் வி.கே.முருகானந்தம் (மன்னாா்குடி), ஜெயகோபி (நீடாமங்கலம்) உள்ளிட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனால், சுமாா் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.