தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதால், கணினி பொறியாளர்களை பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து மன்னார்குடி வட்ட நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் சங்கச் செயலர் டி. கோவிந்தராஜ், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கணினி தொடர்புடைய சாஃப்ட்வேர்கள், சர்வர்களின் இணைப்பு தடைபடும்போது, அதை உடனடியாக சரிசெய்ய போதிய பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை. இதனால், ஆவணப் பதிவு காலதாமதம் ஆகிறது.
ஆவணப் பதிவின்போது பணப் பரிவர்த்தனைகளை மின்னணு வங்கி முறையில் (நெட் பேங்கிங்) செலுத்த வேண்டும்மென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், நடைமுறையில் பல சிக்கல்கள் வருவதால், நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, இணையதளத்தில் பணப் பரிவர்த்தனை செய்வதில் பலருக்குத் தெரிவதில்லை. மேலும், பதிவு ஒருவர் பெயரிலும், பணப் பரிவர்த்தனை மற்றொருவர் பெயரிலும் இருந்தால், சட்ட சிக்கல்கள் உருவாகும். எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில், பணப் பரிவர்த்தனையை முழுமையாக சார் பதிவாளர் அலுவலகத்திலேயே பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், அனைத்து சார் பதிவாளர் அலுவலங்களும் கணினிமயமாக்கப்பட்டிருப்பதால், கணினி பொறியாளர்களைப் பணியமர்த்த வேண்டும். மின்னணு வங்கி மூலம் பணம் செலுத்த இயலாதவர்களுக்கு கேட்பு வரவோலை (டிமாண்ட் டிராஃப்ட்) மூலம் பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.