திருவாரூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
திருவாரூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் 40 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டிகள் 4 தலைப்புகளில் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற மாணவ, மாணவியர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
இந்தப் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எ.ஜெயச்சந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் க. கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், ஆண்டனி ஆரோக்கியராஜ் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஒருங்கிணைப்பாளர் செ.பாண்டியன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.