திருவாரூர் அருகே 15 வயது பெண்ணை திருமணம் செய்துவிட்டு, ஏமாற்றிய இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கூத்தாநல்லூர், சேகரைப் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர், குடவாசல் பகுதியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை காதலிப்பதாகக் கூறி, தொந்தரவு செய்துவந்தாராம்.
பின்னர், ஜனவரி 2-ஆம் தேதி அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு, ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனராம்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அந்த பெண்ணை பிடிக்கவில்லை எனக் கூறி, அந்த பெண்ணின் தாயார் வீட்டில் அவரை விக்னேஷ் விட்டுச் சென்று விட்டாராம்.
இதுகுறித்து, திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, குழந்தை திருமணத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ், விக்னேஷை கைது செய்தனர்.