திருவாரூரில் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை ஏற்க லஞ்சம் கேட்டதாக வட்டார கல்வி அலுவலர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தது: திருவாரூர் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிபவர் பாலசுப்ரமணியன். இவரிடம் விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தை ஆசிரியை ஒருவர் அண்மையில் அளித்துள்ளார். இந்நிலையில், இந்த விண்ணப்பத்தை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக ஆடியோ ஒன்று பரவியது.
இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, பாலசுப்ரமணியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.