திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட 22-ஆவது வார்டு பகுதியில் புதன்கிழமை பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.
இதில், கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம், பாட்டில்களில் தண்ணீர் நிரப்புதல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் அப்பகுதிகளில் உள்ள சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினி சின்னா பரிசுகளை வழங்கினார்.
வண்டாம்பாளையத்தில்...
நன்னிலம் தாலுகா வண்டாம்பாளை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 32-ஆவது ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் உதயம் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்றன.
1500 மீட்டர் ஒட்டப் பந்தயம், மிதிவண்டி போட்டி, நீச்சல் போட்டி, குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, இசைப் போட்டி, எலுமிச்சை பழம் ஒட்டம், மாறுவேட போட்டி, பாட்டுப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வென்றவர்களுக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் திரு.க. வீரமணி, நன்னிலம் காவல் உதவி ஆய்வாளர் அனந்தகிருஷ்னன் ஆகியோர் வழங்கினர்.