திருவாரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டி வியாழக்கிழமை அகற்றப்பட்டது.
திருவாரூர் நேதாஜி சாலையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக இந்த குப்பைத்தொட்டியால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் வாகனங்கள் செல்லவும், வாகனங்களை நிறுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டது.இதையடுத்து அந்த குப்பைத்தொட்டியை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து தினமணியிலும் செய்தி வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த குப்பைத்தொட்டியானது, வியாழக்கிழமை காலை திருவாரூர் நகராட்சி சார்பில் அகற்றப்பட்டது. இதனால் அவ்வழியே வாகனங்கள் எவ்வித சிரமமின்றி செல்ல முடிகிறது. அத்துடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடையூறு இல்லாத இடத்தில் குப்பைத் தொட்டியை வைக்க வேண்டும் என்கின்றனர்அப்பகுதி மக்கள்.