மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின்கீழ் ரூ. 84.64 லட்சம் மதிப்பிலான நுண்ணிய உரமாக்கும் மைய கட்டடத்தை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்து, துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 43.20 லட்சம் மதிப்பில் பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
மன்னார்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், மன்னார்குடியில் வடசேரி சாலை மற்றும் டெப்போ சாலையிலும் ரூ. 84.64 லட்சத்தில் நுண்ணிய உரமாக்கும் மையம் அமைக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் பணிகள் நிறைவடைந்தன. இதேபோல், ஒவ்வொரு தெருவிலும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து வீடுவீடாக சென்று வாங்குவதற்காக, தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் பேட்டரி மூலம் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனம் ரூ. 43.20 லட்சத்துக்கு 24 வாகனங்கள் வாங்கப்பட்டிருந்தன.
இதற்கான விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கலந்துகொண்டு, நுண்ணிய உரமாக்கும் மைய கட்டடத்தை திறந்து வைத்தும், பேட்டரி வாகனங்களை நகராட்சி தொழிலாளர்களுக்கு வழங்கி பேசியது: தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது தமிழகஅரசு. தமிழக முதலமைச்சர் மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றும் விதமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டங்களை பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வீடுகளில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை நடைமுறைபடுத்தினால் தான் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். இதன் மூலம் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மன்னார்குடி கோட்டாட்சியர் எஸ். புண்ணியக்கோட்டி, நகராட்சி ஆணையர் கோ. இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.