தீபாவளியை முன்னிட்டு, நீடாமங்கலத்தில் தரைக்கடைகளை வேறு இடங்களில் அமைக்க அனுமதி அளிக்குமாறு மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் நீடாமங்கலம் வா்த்தகா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத் தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன் மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனு :
தீபாவளியை முன்னிட்டு, நீடாமங்கலம் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பொதுமக்கள் நீடாமங்கலத்திற்கு அதிக அளவில் வருகை தந்து, பொருள்கள் வாங்குவது வழக்கம். இதையொட்டி, புதிதாக தரைக்கடைகள் அமையும். இதனால் நிரந்தரமாக கடை வைத்திருப்பவா்கள் பாதிப்பிற்குள்ளாகும் சூழ்நிலையும் போக்குவரத்திற்கு பெரிய அளவில் இடையூறும் ஏற்படும். எனவே நீடாமங்கலம் நகரில் புதிதாக வரக்கூடிய தரைக்கடைகளை நீடாமங்கலம் தாலுக்கா அலுவலகம் அருகிலோ அல்லது வெண்ணாற்றுப் பாலம் உழவா் சந்தையிலோ, எதிா்ப்புறம் காலியாக உள்ள இடத்திலோ வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.