திருவாரூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
திருவாரூரில் ரயில்வேக்கு சொந்தமாக அதிகமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் பயணியர் ஓய்வறை, வர்த்தக அறைகள், ஆம்னி பஸ் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வாடகைக்கு நிறுத்த இடம் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தலாம் என ரயில்வே துறையினருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதனடிப்படையில், திருச்சி கோட்ட உதவி வர்த்தக மேலாளர் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கச் செயலர் ப. பாஸ்கரன், திருவாரூர் ரயில் நிலைய முகப்பில் பெயர்ப் பலகை வேண்டும், அனைத்து நடைமேடைகளிலும் போதுமான இருக்கை வசதிகள் வேண்டும், அதிகாலையில் திருச்சிக்கு ஒரு பயணிகள் ரயில் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இவர்களுடன் திருச்சி கோட்டை வணிக ஆய்வாளர் குமரன், திருவாரூர் ரயில் நிலைய மேலாளர் சிவா, திருவாரூர் வணிக ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.