திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு தண்ணீர் எடுத்துச் சென்ற டேங்கர் லாரியை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனர்.
மன்னார்குடியை அடுத்த கோட்டூர் அருகில் உள்ள புழுதுகுடி ஊராட்சிக்கு உள்பட்ட சோழங்கநல்லூரில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணி கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இதனால் விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், போராட்டக்குழு அமைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருவதுடன், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் எடுத்துச் சென்றனர். மேலும், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில், சோழங்நல்லூருக்கு அருகில் உள்ள சோமாட்சி கிராமத்தில் விவசாய அழ்துளைக் கிணற்றிலிருந்து எண்ணெய்க் கிணறு அமையும் இடத்துக்கு குடிநீர் எடுத்துக் கொண்டு டேங்கர் லாரி ஞாயிற்றுக்கிழமை வந்தது. இந்த லாரியை சோழங்கநல்லூரில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, சிறைபிடித்தனர்.
தகவலறிந்த கோட்டூர் காவல் ஆய்வாளர் அறிவழகன், அவ்விடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த டேங்கர் லாரியை விடுவித்தார்.
இதைத்தொடர்ந்து, விவசாயப் பயன்பாட்டுக்கான ஆழ்துளைக் கிணற்றிலிருந்து அத்துமீறி குடிநீர் எடுத்து வந்த டேங்கர் லாரி ஓட்டுநர் மற்றும் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் போராட்டக்குழுவினர் புகார் அளித்துள்ளனர்.