திருமீயச்சூர் லலிதாம்பாள் உடனுறை மேகநாதசுவாமி கோயில் மற்றும் சிறுபுலியூர் தயாநாயகி சமேத கிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் நவராத்திரி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) தொடங்குகிறது.
திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் அக்டோபர் 8- தேதி வரை 10 நாள்கள் நவராத்திரி உத்ஸவம் நடைபெறும். இதையொட்டி, தினசரி காலை மாலை இருவேளைகளிலும் ஏகதின லட்சார்ச்சனை, உலக நலன் பொருட்டும், மக்களின் பிரார்த்தனை பொருட்டும் நடைபெற உள்ளது. விஜயதசமி நாளான அக்டோபர் 8-ஆம் தேதி இரவு 8 நெய்க்குள தரிசனமும், மகா ஹவிர் நிவேதனமும் நடைபெற உள்ளது.
இதேபோல், சிறுபுலியூர் தயாநாயகி சமேத கிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி விழாவில் தினமும் காலையில் திருமஞ்சனமும், விசேஷ அபிஷேக - ஆராதனைகளும் நடைபெறும். அக்டோபர் 7- ஆம் தேதி கிருபாசமுத்திர பெருமாள் தாயார் சேர்த்தி புறப்பாடும், ஊஞ்சல் உத்ஸவமும் நடைபெறும். 8- ஆம் தேதி திருமஞ்சனமும், பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடும், அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
இக்கோயிலில் மகாளய அமாவாசையையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் விஸ்வரூப தரிசனமும், தோமாலை சேவை, திருவாராதனமும் நடைபெற்றது. கிருபாசமுத்திர பெருமாள் திருக்கல்யான கோலத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.