திருவாரூரில் கவனக்குறைவாக செயல்பட்டதாக மருந்தாளுநர், தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த விவரம்: திருவாரூர் அருகேயுள்ள கொட்டாரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிப்ரவரி 28-ஆம் தேதி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மைக்கேல் ஸ்டான்லி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு மருந்தாளுநராக பணியாற்றிய ஜி. பைரவநாதன் பணியில் இல்லாததும், நகர்வுப் பணியேட்டிலும் எவ்வித பதிவு இல்லாதது தெரியவந்துள்ளது. இதேபோல், மார்ச் 2-ஆம் தேதி நடைபெற்ற ஆய்விலும், மார்ச் 11-ஆம் தேதி நடைபெற்ற தீவிர போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் 2-ஆம் நாள் கள ஆய்வின்போதும் மருந்தாளுநர் ஜி. பைரவநாதன் பணியில் இல்லாததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லையாம். மேலும், இவர்மீது பொது மக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்தனவாம். இதையடுத்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மைக்கேல் ஸ்டான்லி விசாரணை மேற்கொண்டு, மருத்துவர் ஒப்பம் இல்லாமல் மருந்துகள் வழங்கப்பட்டது, வரவு செலவு கணக்கு புத்தகத்தை தணிக்கைக்கு சமர்ப்பிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பொதுநலன் கருதி ஜி. பைரவநாதனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மருந்தாளுநராக பணியாற்றி வந்த பைரவநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.