திருவாரூர்- காரைக்குடி வழித் தடத்தில் கூடுதல் விரைவு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி, நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை
ம. சரவணன் பாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.
திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் ஆலத்தம்பாடி, கச்சனம், திருக்காரவாசல், மாவூர், பாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குச் சேகரித்தபோது, மேலும் அவர் பேசியது:
திருத்துறைப்பூண்டி- திருக்குவளை- வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் ரயில் சேவையைத் தொடங்கவும், திருவாரூர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பேன்.
திருத்துறைப்பூண்டி, திருவாரூரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புறவழி சாலை மற்றும் வட்டச் சாலை அமைக்க ஏற்பாடு செய்வதுடன், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பேன்.
திருத்துறைப்பூண்டி, திருவாரூர் நகரில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரவும், தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்கவும், குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறி வாக்குச் சேகரித்தார்.