திருவாரூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
17-ஆவது மக்களவைத் தேர்தலானது, ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அத்துடன், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி உள்ளிட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 16) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்ச் 20-ஆம் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அதேபோல் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை திருவாரூரில் முடிக்கிறார்.
முன்னதாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் காலை 8.30-க்கு பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் 9 மணிக்கு குடவாசல், 9.30 மணிக்கு கொரடாச்சேரி, 10.30 மணிக்கு கூத்தாநல்லூர், 11 மணிக்கு கோட்டூர், 11.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் பிரசாரம் செய்கிறார். பின்னர் 12 மணிக்கு நீர்முளை, 1 மணிக்கு நாகப்பட்டினம், 1.30 மணிக்கு கீழ்வேளூர் என பிரசாரம் மேற்கொள்ளும் அவர் இறுதியாக திருவாரூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.