கூத்தாநல்லூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தொழிலாளியின் 15 வயதுடைய மகள், அப்பகுதியில்10- ஆம் வகுப்பு படித்துவந்தார். இவரும், கோரையாறுப் பகுதியைச் சேர்ந்த வாஜ்பாய் என்ற இளைஞரும் காதலித்து வந்தனராம். இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் கண்டித்தனராம். இதனால், மனமுடைந்த மாணவி, ஏப்ரல் 8-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சனிக்கிழமை (ஏப்.13) உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, மாணவி கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் கமல்ராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, வடகோவனூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் தாஸ் (26), ஜீவா காலனியைச் சேர்ந்த குமார் மகன் விஜய் (25), துரைசாமி மகன் முருகேசன் (29), கோவிந்தன் மகன் அஜித்குமார் (22) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
வீடுகள் சேதம்
உயிரிழந்த மாணவியின் உறவினர்கள், ஆத்திரத்தில் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள தாஸ், ஜீவா தெருவைச் சேர்ந்த விஜய் உள்ளிட்ட 3 பேரின் வீட்டையும் சேதப்படுத்தினர்.
இதுதொடர்பாக, வடகோவனூர் ஜீவா தெருவைச் சேர்ந்த குமார் (45) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், வடகோவனூர் வடக்குத் தெரு மோகன் (40), காளியம்மன் கோயில் தெரு பிரதீப் (24), கபிலன் (20), தெற்குத் தெரு பாரதி (38), டேனியல் (20), சபரி, இளையராஜா, லட்சாதி, சுபாஷ்சந்திரபோஸ், அய்யப்பன்,விஜி, சந்தோஷ் ஆகிய 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.