கூத்தாநல்லூரில் எழுந்தருளியுள்ள ஜயசக்தி ஆஞ்சநேயர் சனிக்கிழமை வெண்ணெய் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி- கொரடாச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள ஜயசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் அலங்காரம் சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. வெண்ணெய் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். இதேபோல், வேளுக்குடியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மூலவர் பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதர், லெஷ்மி நாராயணன், சீதா, ராமர், லெஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
மூலங்குடி இந்துசமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான லெஷ்மி நாராயண பெருமாள் கோயிலில் ராமபக்த ஆஞ்சநேயர், மரக்கடை கல்யாணசுந்தரேசுவரர் கோயிலில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஆஞ்சநேய சுவாமிகளுக்கும் அனைத்து வித திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.