மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியை காணவில்லை என காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
மன்னாôர்குடி வட்டாட்சியர் என்.கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள், கடந்த மாதம் 23-ஆம் தேதி, மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் அரசுஅனுதியின்றி ஆற்றிலிருந்து மணல் ஏற்றிவந்த லாரியை பறிமுதல் செய்தனர். இந்த லாரி மணல் பாரத்துடன் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலக இரவு காவலர் ரவி, வெள்ளிக்கிழமை பணியில் இருந்தபோது, அயர்ந்து தூங்கிவிட்டாராம். அப்போது, மர்ம நபர்கள், டிப்பர் லாரியை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வட்டாட்சியர் கார்த்திக், மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.