திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறை முதலாம் ஆண்டு மாணவர்களின் கவிதைத் தொகுப்பான "முகை' வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
திருவிக அரசு கலைக்கல்லூரி தமிழ் உயராய்வுத் துறையின் முதலாமாண்டு மாணவர்கள் சார்பில் "முகை' என்னும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் கோ. கீதா பங்கேற்று, நூலை வெளியிட்டார்.
இதுகுறித்து, மாணவர்களின் கவிதைகளை தொகுத்து வெளியிட்ட தமிழ் உயராய்வுத் துறை தலைவர் செ. அஜிதா தெரிவித்தது:
தமிழ்த் துறையில் ஊடகவியல் என்ற துணைப்பாடம் உண்டு. இதில், கவிதை தொடர்பாக அசைன்மென்ட் மாணவர்களுக்கு தருவது வழக்கம். அதன்படி, இந்தமுறை புத்தகமாக வெளியிடலாம் என முடிவு செய்தோம். ஜூன் 17- ஆம் தேதி கல்லூரி திறக்கப்பட்டது. தமிழ்த் துறையில் உள்ள 60 மாணவர்களிடம், அசைன்மென்டாக கவிதைகளை எழுதி வரச் சொன்னோம். 12- ஆம் வகுப்பு முடித்துவிட்டு வந்து சேர்ந்துள்ளதால், சிலருக்கு தடுமாற்றம் இருந்தது. அந்த குறைபாடுகளை சரிசெய்து, புத்தகமாக தயார் செய்தோம். புத்தகம் தயாரிப்பு பணிகளை ஜூலை 31-க்குள் முடித்து விட்டோம். புத்தகத்துக்கு என்ன பெயர் வைப்பது என்று தீவிரமாக யோசித்து, "முகை' என்று பெயரிட்டோம். அதாவது, முகை என்பது மலரின் 3-ஆவது பருவம். மலர்ந்தும், மலராத நிலைக்குப் பெயர். அதேபோல், கல்லூரிக்கு வந்து, இனிமேல் எதிர்காலத்தை பற்றி தங்கள் கனவுகளை சிறகுகள் மூலம் விரிக்கும் மாணவர்கள் என்பதற்காக பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் கவிதைகள் எழுத நினைக்கும் மாணவர்களுக்கும், புத்தகம் வெளியிட விரும்பும் மாணவர்களுக்கும் இந்த புத்தக வெளியீடு பெரும் பயனளிக்கும் என்றார் அவர். இதுகுறித்து, கல்லூரி முதல்வர் கோ. கீதா தெரிவித்தது:
மாணவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கும் இடம் கல்லூரியே. இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களை மேலும் உயர்ந்த சிந்தனைகளை மேற்கொண்டு, பெரிய சாதனைகள் புரிய உதவியாக இருக்கும் என்றார் அவர்.
முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கி 2 மாதமே ஆன நிலையில், மாணவர்கள் புத்தகம் வெளியிடப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை
பெற்றுள்ளது.