சாலைப் பாதுகாப்பு விதிகளை அனைவரும் முறையாக கடைப்பிடித்தால் விபத்துகளை குறைக்க முடியும் என திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி. செந்தில்குமார் பேசினார்.
திருவாரூர் மாவட்டம், பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மேலும் அவர் பேசியது: சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்து நடந்தால் நிச்சயமாக விபத்துகளை குறைக்க முடியும். சாலை விதிகளின்படி ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும், சிறுவர், சிறுமிகள் வாகனம் ஓட்டுவதை பெற்றோர்கள் ஊக்குவிக்கக் கூடாது. வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு வயது இருப்பதைப்போல ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குரிய வயதை அடைந்தவுடன், ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனத்தை ஓட்ட வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிவதுடன், இருவருக்கும் மேல் பயணிக்கக் கூடாது. கார் போன்ற வாகனங்களை ஓட்டும்போது கார்பெல்ட் அணிய வேண்டும். அதிகபட்ச வேகத்தில் வாகனங்களை இயக்க கூடாது போன்ற சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்தால் நிச்சயம் விபத்துக்களை குறைக்க முடியும் என்றார் அவர்.
கருத்தரங்கில், சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கப்பட்டன. மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் மற்றும் திடீரென விபத்து ஏற்படும்போது எவ்வாறு முதலுதவி செய்தல் உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகள் எடுத்துரைக்கப்பட்டன.
இதில், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஜனார்த்தனன், பள்ளித் தாளாளர் ஜி. வெற்றிசெல்வம், மாவட்ட எழுத்தறிவித்தல் கமிட்டித் தலைவர் வி. ராமன், பள்ளி இயக்குநர் ஏ. சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.