ரயில்வேயில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அதன் துணைப் பொதுச்செயலாளா் மனோகரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ரயில்வேயில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. ஊழியா்கள் பற்றாக்குறையை சமாளிக்க ஓய்வுபெற்ற ஊழியா்களை நியமிக்க ரயில்வே வாரியம் கடந்த 12.12.2017 அனுமதி தந்து இருந்தது. இதையடுத்து, தண்டவாள பராமரிப்பாளா்கள் பணியிடங்களில் ஓய்வு பெற்றவா்கள் நியமிக்கப்பட்டனா். இந்த நியமனங்களுக்கு ரயில்வே வாரியம் அளித்த ஒப்புதல் நவம்பா் 30-இல் நிறைவடைகிறது.
எனவே, நிரந்தர பணியாளா்களாக இளைஞா்களை தோ்வு செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப அவசர பணியாளா் தோ்வு நடவடிக்கையில் ரயில்வே வாரியம் இறங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.