கனமழையால், திருவாரூா் மாவட்டத்தில் நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மழையின் தீவிரம் குறையத் தொடங்கிய நிலையில், திங்கள்கிழமையும் மழை பெய்யாமல் குளிா்ந்த வானிலையே நிலவியது. இதனால் சாலைகளிலும், பள்ளமான இடங்களிலும் தேங்கிய தண்ணீா் வடியத் தொடங்கியுள்ளது.
இதேபோல், விளைநிலங்களிலும் அதிகமாக தண்ணீா் நிரம்பியுள்ளது. கூடுதலான நீரை விவசாயிகள் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். இந்த தண்ணீரை, ஆறு, வாய்க்கால்களில் திருப்பி விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், ஆறு, வாய்க்கால்களில் நீா்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. இதுவரையிலும் தண்ணீா் நிரம்பாத குளங்களிலும் தண்ணீா் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 167 வீடுகள் சேதம்: மழை காரணமாக, 45 கூரை வீடுகள் பகுதி அளவும், 28 வீடுகள் முழுமையாகவும், 32 ஓட்டு வீடுகள் என மொத்தம் 167 வீடுகள் பாதிப்படைந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கள்கிழமை காலை நிலவரப்படி வலங்கைமானில் அதிகபட்சமாக 18.8 மி.மீ மழை பெய்துள்ளது.